நாம் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு விஷயம் கடந்த 25-ந்தேதி வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2011) அன்று நடந்தேறியிருக்கிறது. ஆமாம்... நமக்காக போராடி சிறை சென்ற நம் சகோதரர்கள் அனைவரும் கடந்த வெள்ளியன்று ஜாமீனில் வெளியாகியிருக்கிறார்கள்.
பட்டுக்கோட்டை நகரில் நடைபெற்ற இந்த இனிய நிகழ்வில் கலந்து கொள்ள கடந்த வெள்ளியன்று நமது சமுதாய மக்கள் பட்டுக்கோட்டை நகரில் பெரும் திரளாக கூடியதைக் கண்டு பொதுமக்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார்கள். இப்படி ஒரு கூட்டம் எங்கிருந்து வந்தது, எதற்காக வந்தது என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டார்கள். மேலும் அன்றைய தினம் பட்டுக்கோட்டை நகரும், நீதி மன்ற வளாகமும் நம் சமுதாய மக்களால் நிரம்பி வழிந்தது என்று தான் சொல்ல வேண்டும். உண்மைக்கும், நேர்மைக்கும், பொறுமைக்கும் கிடைத்த பரிசாக தான் நம் சமுதாயத்தினர் அதை பார்த்தனர். சட்ட சம்பிரதாயங்கள் முடிந்து வெளியே வந்த நம் சகோதரர்களை அவர்களின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க வரவேற்றது அனைவரது நெஞ்சையும் நெகிழ வைப்பதாக இருந்தது.
அன்றிரவு 9 மணிக்கெல்லாம் அவர்கள் நம் ஊர் வந்து சேர்ந்தார்கள். ஜாமீனில் வந்தவர்களை நம் மக்கள் நேரில் சென்று சந்தித்து தங்கள் அன்பையும், ஆறுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்கள்.
இந்த இனிய நிகழ்வு நடைபெற நமக்காக உழைத்த நமதூர் ஜமாஅத் நிர்வாகத்தினருக்கும், ஒத்துழைத்த நம் ஊர் பொதுமக்களுக்கும், மல்லிப்பட்டினம் ஜமாத்தார்களுக்கும், TNTJ அமைப்பிற்கும், நண்பர்கள், நமக்கு நீதி கிடைக்க உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகள், காவல்துறையினர், நமது சமுதாய ஏனைய அமைப்புகள், நமக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும், நமக்காக போராடி சிறை சென்றதால் ஏற்பட்ட அனைத்து கஷ்டங்களையும் பொறுமையுடன் தாங்கிக்கொண்ட, நமதூர் கண்ணியத்தை தங்கள் போராட்டம் மூலம் காப்பாற்றித் தந்த, நம் வாழ்வுரிமைக்காக சிறைசென்று நம் உரிமைகளை நிலைநாட்டிய நமது சகோதரர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், குடும்பத்தார்களுக்கும், இந்நிகழ்விற்காக எல்லா வகையிலும் ஊக்கப்படுத்தி உற்சாகம் தந்த வெளிநாடு வாழ் சமுதாய மக்களுக்கும், நமக்காக அன்றாடம் நடக்கும் உண்மை நிகழ்வுகளை அடிக்கடி தகவல்களாக தந்த நமது அன்புச்சகோதரர்களுக்கும் புதுப்பட்டினம் டுடே சார்பாக நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்..!!
தகவல் உதவி:
நன்றி: சகோ. அஹமது ஜமீல் (ahamed.jml@gmail.com)